கலை
இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?
கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன - அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.
கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.
நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் - முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே - கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு - வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….
ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.
சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் - ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.
தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை - ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.
கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு - ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..
மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.
Post a Comment