Header Ads

விருச்சிகம்

மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம் விட்டுப்பேசும் நீங்கள், தயாள குணம் கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும், அசாத்திய திறமை கொண்ட நீங்கள், அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் அடக்கமாக இருப்பீர்கள். தவறுசெய்யும் வாய்ப்பிருந்தும் தவறாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு கடந்த ஓராண்டு காலமாக 9ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தார். ஓரளவு கௌரவத்தையும் தந்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்குள் நின்று பலன் தரப் போகிறார். பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே!


உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குடும்பத்துடன் வெளி ஊருக்குச் செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுபோக வாய்ப்பிருக்கிறது. பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
பார்வைக் கோளாறு, பல்வலி சரியாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குருபகவான் தனது 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்பு கூடும். உங்களின் 6ம் வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சில வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது வாய்ப்புகள் வரும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களை சந்திப்பீர்கள். வீண்பழி, விபத்து, இழப்பு, உடல் நலக்குறைகள் வந்துபோகும்.  

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் விரயாதி பதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழமை வாய்ந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனைவி வழியில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும்.

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்துபேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைபட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.      

குருபகவானின் வக்ர கால பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அலைச்சல் இருந்தாலும் சாதிப்பீர்கள்.

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலை கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழி சொத்துகளும் கைக்கு வரும்.

வியாபாரிகளே! வழக்கமான லாபம் உண்டு. போட்டியாளர்களை சமாளிக்க விளம்பர யுக்திகளை கையாளுங்கள். பழைய தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது. சிலரின் தவறான ஆலோசனைகளை ஏற்காதீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். புதிதாக பங்குதாரர்களை சேர்க்கும் போது சட்டப்படி உரிய ஆவணங்களில் எழுதி பிறகு கையொப்பமிட்டு சேர்த்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால் வழக்கறிஞரின் ஆலோசனையையும் ஏற்பது நல்லது.

உத்யோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளை அலுவலகத்தில் பரப்புவார்கள். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். அலுவலகத்தில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என தெரியாத காதலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். படிப்பில் தடை வரக்கூடும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல் பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. உயர்கல்வியில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.  

மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். விளையாட்டு விளையாட்டு என்றிருக்காமல் படிப்பில் அக்கறை காட்டுங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். வகுப்பறையில் முன் வரிசைக்கு அமருங்கள். விடைகளை எழுதி பாருங்கள். வேதியியல், உயிரியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.   

அரசியல்வாதிகளே! விட்டுக் கொடுத்து போக வேண்டி வரும். உங்கள் புகழை கெடுப்பதற்கு சிலர் முயல்வார்கள். தலைமையின் பார்வை உங்கள்மீது விழும். சகாக்கள் உங்களை ஆழம் பார்ப்பார்கள். எதிர்கட்சிக்காரர்களை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம்.  

கலைத்துறையினரே! உங்களை பற்றிய, விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட நேரிடும். பழைய சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! மகசூலை ரெட்டிப்பாக்குவதாக நினைத்து கண்ட மருந்து, உரங்களை பயன்படுத்தாதீர்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு இவைகள் லாபம் தரும்.

பரிகாரம்: பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை