Header Ads

த. தே. கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும்

தமிழ் தேசியகூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் யாரை நியமிப்பது என்று இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு ஆசனம் வழங்கக்கூடாது என்பதில் தலைமையும் சில முக்கியஸ்தர்களும் உறுதியாக உள்ளதாக தெரியவருகின்றது.எது எவ்வாறு இருந்தாலும் தேசிய பட்டியல் மூலம் பெண் ஒருவரே


பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற கருத்தும் பரவலாக தற்போது மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற விடயமாகும். இதற்குக்காரணம் தெரிவு செய்யப்பட்ட 14 உறுப்பினர்களுள் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை.எனவே தேசிய பட்டியல் மூலம் பெண் ஒருவரை கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்புக்கு அதி கூடிய வாக்குகளை வழங்கிய மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  அனுப்பப்பட வேண்டும் இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை  உரிய நடவடிக்கைகளளை மேற்கொள்ளும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்


தற்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றபோதும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத்தொகுதியிலிருந்து எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக பட்டிருப்புத் தொகுதிக்கே தேசிய பட்டியல் வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டிவரும்.

பட்டிருப்புத்தொகுதியில் பெண்களுக்கான தலைமைத்துவத்தை கொண்டு வழிநடாத்தக்கூடிய பல பெண்கள் இன்று நம்மத்தியில் உள்ளனர்.இதில்; படுவான்கரை பிரதேசத்திலிருந்து தெரிவு இடம்பெற்றால் மிகவும் சாலப்பொருத்தமாக இருக்கும்.. அந்த வகையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும்,சட்டத்தரணியும், திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதி நேர சட்டவிரிவுரையாளரும், 2015இல் பட்டிப்பளை பிரதேசத்தில் சிறந்த பெண்மணிக்கான விருதினைப்பெற்ற  திருமதிமங்களேஸ்வரி சங்கர் இதற்குப் பொருத்தமானவர்..

  படுவான்கரையிலிருந்து ஒரு குரல்