Header Ads

முனை மண்ணின் சொத்து சி. வரதசீலன் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உபதலைவராகப் பதவியேற்பு

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பொது நிலையினருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவமான உபதலைவர் நியமனம் இவ்வாண்டு மட்டக்களப்பு முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிந்தாத்துரை வரதசீலன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. 


இவர் உபதலைவராகப் பதவியமர்த்தப்படும் வைபவம் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மதகுரு அல்லாத பொது நிலையினர் ஒருவருக்கு இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் கிடைக்கின்ற அதியுயர் கௌரவம் இதுவாகும். இலங்கை முழுவதிலுமுள்ள மெதடிஸ்த சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 350 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றும் திருப்பேரவை மாநாட்டில் ஆண்டு தோறும் அடுத்த ஆண்டுக்கான உபதலைவர் தெரிவு சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். அதற்கமைய கடந்த 2015 ஆகஸ்டில் நடைபெற்ற மாநாட்டில் 2016 – 17 காலப்பகுதிக்கான உபதலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் ஒரு வருட காலத்திற்குப் பதவி வகிப்பார்.  

மட்டக்களப்பு முனைக்காட்டைச் சேர்ந்த கலஞ்சென்ற ஆசிரியர் திரு சிந்தாத்துரை மற்றும் திருமதி நவமணி சிந்தாத்துரை ஆகியோரின் மகனாக 1957 ஆகஸ்ட் 19ம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்ஃமுனைக்காடு மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்ஃபுனித மிக்கேல் கல்லூரியிலும் கற்றார். ஆங்கில ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆசிரியப் பணி புரிந்தார். அனைத்திலங்கை ரீதியான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானார். அதைத் தொடர்ந்து அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தார். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும்போது ஜீ. ரீ. இசற் நிறுவனத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்ட ‘ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சிச் செயற்றிட்டத்தின்’ செயற்றிட்ட அலுவலராகப் பணிபுரிவதற்காக விடுவிக்கப்பட்டார். பின்னர் அரச சேவையிலிருந்து விலகி ;சேவ் த சில்ரன்’ எனும் பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனத்திலும் தொடர்ந்து யுனிசெவ் நிறுவனத்திலும் கல்வித்துறை சார் பதவிகளிலிருந்து சமூகப் பணியாற்றினார். ‘றூம் டு றீட்’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் கல்வித்துறை சார் செயற்றிட்டமொன்றின் நிபுணத்துவ ஆலோசகராக மலையகப் பகுதிகளிலும்  பணியாற்றியுள்ளார். பின்னர் யுனிசெவ் நிறுவனத்தின்  நிபுணத்துவ ஆலோசகராக ‘இசுறுபாய’ கல்வியமைச்சிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் திருகோணமலை மாவட்டச் செயலாற்றுப் பணிப்பாளராகச் சேவையாற்றுகின்றார். 

முனைக்காட்டில் வசித்த காலப்பகுதியில் பல்வேறு கல்வி கலாசார அமைப்புகள் மூலம் சமூகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் மா. செல்வராசா அவர்களால் நிறுவப்பட்ட ‘ஒளிக்கல்லூரி’ யின் தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன் அதன் அதிபராகவும் சில காலம் பணிபுரிந்துள்ளார். ஒளிக்கல்லூரியால் வெளியிடப்பட்ட ‘ஒளி’ எனும் கலை, இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியராக இருந்து தொடர்நது ஐந்து இதழ்கள் வெளிவரச் செய்துள்ளார். 80 களில் படுவான்கரை மண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி அக்காலப்பகுதியில் பலராலும் பாராட்டப்பட்டதுடன் இம்மண்ணின் பெருமைகளை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. 1986 தொடக்கம் 1990 வரை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் தொடர்ந்து அதிபராகவும் பணி புரிந்த இவரது மாணவர்கள் பலர் இன்று படுவான்கரைப் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்களாகவும் அரச பதவிகளை வகிப்போராகவும் உள்ளனர். 70 – 80 காலப் பகுதிகளில் முனைக்காட்டில் இயங்கிய கலைக்கதிர் கலாமன்றத்திலும் உறுப்பினராக இருந்து நாடகம் மற்றும் நாட்டுக் கூத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். 

மெதடிஸ்த திருச்சபையைப் பொறுத்தவரையில் பல மட்டங்களில் பணி புரிந்த அனுபவம் இவருக்குண்டு. வடக்கு-கிழக்கு திரு மாவட்ட அவையில் ஞாயிறு பாடசாலைகளுக்குப் பொறுப்பான செயலாளராகவும் மாவட்ட அவையின் உதவிச் செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார். 1989 முதல் அநேகமான திருப்பேரவைக் கூட்டத்தொடர்களில் பங்கு பற்றியுள்ளார். கடந்த ஆண்டு திருப்பேரவையின் உதவிச் செயலாளராகவும் இருந்துள்ளார். 

திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு,திருமதி வேல்முருகு அவர்களின் மகளான இவரது மனைவி சுகந்தினி வரதசீலன் அவர்கள் தற்போது திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். இவர்களுக்கு ஷலோமி, நயோமி ஆகிய இரு பெண் பிள்ளைகளை இறைவன் ஈவாகத் தந்துள்ளார். 

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு-கிழக்கு திரு மாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு. எஸ்.டி. தயாசீலன் அவர்களின் இளைய சகோதரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1989 இல் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் தினபதி, தினகரன் ஆகிய தேசிய தமிழ் நாளேடுகளிலும்  200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை 2014 இல் வீரகேசரியிலும் பிரசுரமாகியுள்ளன. 

தற்போது கிடைக்கின்ற உப தலைவர் என்ற பதவி மூலம் வடக்கு-கிழக்குக்கு வெளியிலும் இறைநாம மகிமைக்கென்று செயற்படும்  சந்தர்ப்பத்தைப் பெறுகின்ற இவருக்கு இறையாசி கிடைக்க வேண்டி வாழ்த்துகிறோம்.

முனைமண்ணின் சொத்துக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.